×

பழநி அருகே காட்டுயானைகளால் காலியாகும் சோளம் விவசாயிகள் கவலை

பழநி, மார்ச் 5: பழநி அருகே கோம்பைபட்டியில் காட்டு யானைகள் மக்காச்சோளத்தை நாசம் செய்வதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
பழநி மற்றும் ஒட்டன்சத்திரம் வனச்சரத்திற்குட்பட்ட மலையோர கிராமங்களில் கடந்த சில ஆண்டுகளாக காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. வனத்துறையினர் சோலார் மின்வேலி அமைத்தல், அகழி அமைத்தல் போன்ற பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டும் பலன் ஏதுமில்லை. இந்நிலையில் வறட்சியின் காரணமா வனப்பகுதியில் உணவு, குடிநீர் இல்லாததால் காட்டுயானை கூட்டம் தற்போது வனப்பகுதியை ஒட்டிய விளைநிலங்களுக்குள் புகுந்து வருகின்றன.

பழநி அருகே ஒட்டன்சத்திரம் வனச்சரகத்திற்குட்பட்ட கோம்பைபட்டி கிராமத்தில் கரும்பு மற்றும் காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளன. இப்பகுதிக்குள் புகுந்த ஒற்றை யானை நேற்று முன்தினம் அங்குள்ள அறுவடை செய்து குவித்து வைக்கப்பட்டிருந்த மக்காச்சோளத்தை சேதப்படுத்தியது. மேலும், அருகில் அறுவடைக்கு தாயராக இருந்த மக்காச்சோள பயிர்களையும் சேதப்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கோம்பைபட்டியை சேர்ந்த துரை கூறியதாவது, ‘எங்கள் பகுதிக்குள் காட்டு யானைகள் அதிகளவு வருகின்றன. சில சமயம் கூட்டமாகவும், சில முறை ஒற்றையாகவும் வந்து தொல்லை தருகின்றன. பயிர்கள், வீடுகளை சேதப்படுத்துவதால் லட்சணக்கணக்கில் நஷ்டமடைந்துள்ளோம். வனத்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்தி யானைகளை வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமடைந்த பயிர்கள், வீடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Sorghum farmers ,Palani ,
× RELATED கோடை காலத்தை சமாளிக்க பண்ணைக்குட்டைகள் அமைக்க விவசாயிகள் ஆர்வம்