×

பிளஸ் 1 தேர்வு துவங்கியது தமிழ் தேர்வில் 1,294 பேர் ஆப்சென்ட்

திண்டுக்கல், மார்ச் 5: பிளஸ் 1 தேர்வு துவங்கிய நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று நடந்த தமிழ் தேர்விற்கு 1,294 பேர் வராமல் ஆப்சென்ட் ஆகினர். தமிழகம் முழுவதும் பிளஸ் 1 அரசு பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. திண்டுக்கல் வருவாய் மாவட்டத்தை பொறுத்தவரை திண்டுக்கல், பழநி, வத்தலக்குண்டு, வேடசந்தூர், ஆகிய 4 கல்வி மாவட்டங்களில் பிளஸ் 1 தேர்வை 88 தேர்வு மையங்களில் 10,106 மாணவர்களும், 11,307 மாணவிகளும், 201 தனித்தேர்வர்கள் என மொத்தம் 21,614 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

தேர்வு நடைபெறும் மையங்களுக்கு முதன்மை கண்காணிப்பாளர்களாக 88 பள்ளி தலைமை ஆசிரியர்கள், துறை அலுவலர்களாக 88 மூத்த முதுகலை ஆசிரியர்களும், 400 தேர்வர்களுக்கு மேல் தேர்வு எழுதும் 10 மையங்களில் கூடுதலாக 10 முதன்மை கண்காணிப்பாளர்களும், 10 கூடுதல் துறை அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அறை கண்காணிப்பாளர்களாக 1441 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு சொல்வதை எழுதுபவராக 41 ஆசிரியர்களும், 175 அலுவலக பணியாளர்கள் மையங்களில் முதன்மை கண்காணிப்பாளர்களுக்கு உதவியாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். அனைத்துத் தேர்வு மையங்களுக்கும் காவல்துறை மூலம் காவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.வினாத்தாள் கட்டுக்கள் 9 மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 22 வழித்தடங்களில் அலுவலர்கள் மூலம் சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

இத்தேர்வினை கண்காணிக்கும் வகையில் முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில், 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு தேர்வு மையங்களை திடீர் ஆய்வு மேற்கொள்ளும். மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர், 4 மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் 2 மாவட்ட திட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் (ஒருங்கிணைந்த கல்வித்திட்டம்) தலைமையில் இக்குழு செயல்படும்.

ஒட்டுமொத்த வருவாய் மாவட்டத்தில் நடைபெறும் பொதுத்தேர்வுகளை கண்காணிக்கும் வகையில் இணை இயக்குநர் (மேல்நிலை) அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் வருவாய் கல்வி மாவட்டத்தில் நேற்று நடந்த பிளஸ் 1 தமிழ் தேர்வை எழுத ஆண்கள் 10,656, பெண்கள் 11,703 என 22,539 பேர் பதிவு செய்திருந்தனர். இதில் தேர்வு எழுதியவர்கள் ஆண்கள் 9,868, பெண்கள் 11,168 என மொத்தம் 21,065 பேர் ஆவர். தேர்வுக்கு வராமல் ஆண்கள் 738, பெண்கள் 536 என மொத்தம் 1,294 பேர் ஆப்சென்ட் ஆகினர்.

Tags : Tamils ,
× RELATED தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம்