×

உளுந்து பயிரில் டிஏபி கரைசல் தெளித்தால் 25 சதவீதம் கூடுதல் மகசூல்

சேதுபாவாசத்திரம், மார்ச் 5: சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் சாகுபடி செய்துள்ள உளுந்து பயிரில் 25 சதவீதம் கூடுதல் மகசூல் பெற டிஏபி கரைசல் தெளிப்பது அவசியமாகும் என்று விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேதுபாவாசத்திரம் வட்டார வேளண்மை உதவி இயக்குனர் (பொ) மாலதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்து பயிரில் 25 சதவீதம் வரை கூடுதல் மகசூல் பெற 2 சதவீத டிஏபி கரைசல் தெளிப்பது மிகவும் அவசியமாகும். ஒரு ஏக்கருக்கு தேவையான 4 கிலோ டிஏபி உரத்தை நன்கு தூள் செய்து 10 லிட்டர் தண்ணீரில் முதல் நாளே ஊற வைத்து நன்கு கலக்கி விட வேண்டும். மறுநாள் தெளிந்த கரைசலை மட்டும் வடிகட்டி எடுத்து கொண்டு அத்துடன் 190 லிட்டர் தண்ணீர் சேர்த்து மாலை வேளையில் கைத்தெளிப்பான் கொண்டு ஒரு ஏக்கர் பரப்பில் தெளிக்க வேண்டும்.

35வது நாள் பூக்கும் தருணத்தில் ஒரு முறையும், 45வது நாள் காய் பிடிக்கும் தருணத்தில் ஒரு முறையும் கரைசல் தயாரித்து 2 முறை தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் மண்ணில் இருந்து நேரடியாக மணிச்சத்தை எடுத்து கொள்ள முடியாத பயிர்கள் டிஏபி கரைசல் மூலமாக இலை வழியாக மணிசத்து அளிக்கும்போது பயிர்கள் உடனடியாக மணிச்சத்தை பெறுவதுடன் உருவாகும் பூக்களை எல்லாம் பிஞ்சுகளாக மாறி காய்களாக உருவாகி அதில் உள்ள விதைகள் நல்ல திரட்சியான எடையுடன் கூடிய தரமான மணிகளாக கிடைக்கிறது. இதனால் வழக்கத்துக்கு மாறாக ஒரு ஏக்கரில் 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் மகசூல் கிடைக்கிறது. எனவே உளுந்து சாகுபடி செய்துள்ள விவசாயிகள் டிஏபி கரைசல் தெளித்து கூடுதல் மகசூல் பெறலாம். இதுதொடர்பாக மேலும் விவரங்கள் அறிய வேளாண்மை உதவி இயக்குனர் மற்றும் வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாாம்.

Tags :
× RELATED இன்று குருபெயர்ச்சி: திட்டை...