குளித்தலை, மார்ச் 5: கிருஷ்ணராயபுரம் அருகே நடந்து சென்ற முன்னாள் ஊராட்சி தலைவரிடம் ரூ.40ஆயிரத்தை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அடுத்த மகாதானபுரத்தைச் சேர்ந்தவர் மலைக்கொழுந்து (80). இவர் ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி எழுத்தர். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராவார். இவரது மனைவி மாரியாயி (78), ஓய்வுபெற்ற ஆசிரியை. இவர்கள் இருவரும் நேற்று குளித்தலை பஸ் நிலையம் அருகே இந்தியன் வங்கி கிளையில் இருவரது கணக்கில் இருந்து ரூ. 40,000 எடுத்துக்கொண்டு அருகிலுள்ள மருத்துவரை பார்க்க நடந்து சென்றுள்ளனர். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரில் ஒருவர் மலைக்கொழுந்து கையில் இருந்து பணப்பையை பறித்துச் சென்றனர். அப்போது அவர் கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் துரத்திச் ெசன்றும் மர்மநபர்களை பிடிக்கமுடியவில்லை. பின்னர் இதுகுறித்து குளித்தலை காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின்பேரில் போலீசார் இந்தியன் வங்கி மற்றும் அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை வைத்து முதியவர்கள் பணம் பறிகொடுத்த நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் அவ்வழியாக சென்ற வாகனங்களை கண்காணித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.