ஊட்டி, மார்ச் 5: நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்த போதிலும் ஊட்டியில் மட்டும் மழை பெய்யாததால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் விரக்தியடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் முதல் மழை பெய்யவில்லை. அதேசமயம், பனியின் தாக்கம் சற்று அதிகமாக காணப்பட்டது. இதனால், போதிய தண்ணீர் இன்றி ேதயிலை மற்றும் மலை காய்கறி விவசாயம் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், ஊட்டி புறநகர் பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக அவ்வப்போது சாரல் மழை பெய்தது. சில இடங்களில் கன மழையும் பெய்தது. ஆனால் ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழை பெய்யவில்லை. மேலும் கடந்த சில நாட்களாக வானம் மேக மூட்டத்துடன் காட்சியளிக்கிறது. மழை பெய்ய வேண்டி தற்போது பலர் வர்ண பகவானுக்கு பூஜை செய்து வருகின்றனர். கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் மழை பெய்யவில்லை எனில், அனைத்து நீரோடைகள் மற்றும் அணைகள் வற்றி போக வாய்ப்புள்ளது. இதனால், விவசாயம் பாதிக்கும் என விவசாயிகள் வருத்தம் தெரிவித்தனர்.