ஈரோடு, மார்ச் 5: ஈரோடு அன்னை சத்யா நகரில் சேதமான பாதாள சாக்கடை சீரமைக்கப்பட்டது. ஈரோடு பிபெ.அக்ரஹாரம் அருகே அன்னை சத்யா நகரில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் புதிதாக கட்டப்பட்ட 448 அடுக்குமாடி குடியிருப்பில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்தாண்டு பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கப்பட்டது. இதில், அன்னை சத்யாநகரில் பாதாள சாக்கடையின் மேல்புறம் போடப்பட்ட வட்ட வடிவிலான சிலாப் கற்கள் உடைந்து, கழிவுநீர் அப்பகுதியில் குளம் போல் தேங்கியது. இதனால், அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து தினகரன் நாளிதழில் கடந்த 2ம் தேதி படத்துடன் விரிவான செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் அன்னை சத்யா நகரில் சேதம் அடைந்த பாதாள சாக்கடையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், உடைந்து போன பாதாள சாக்கடை மேல்புற வட்ட வடிவிலான சிலாப் கற்களை தரமானதாக மாற்றி அமைத்தனர். மேலும், அங்கு தாழ்வான பகுதியில் தேங்கி இருந்த கழிவுநீரை அகற்ற, அந்த பகுதிகளை மணல் நிரப்பி சமன் செய்தனர். இதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.