அந்தியூர், மார்ச் 5: வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனப்பகுதியில் வரட்டுப்பள்ளம் அணை உள்ளது. இந்த அணையில், தற்போது 33 அடி கொள்ளளவுடன் 130 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. இதைக்கருத்தில் கொண்டு விவசாயிகள் பாசனப் பகுதிக்கு தண்ணீர் திறக்க மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர். அதன்படி, வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு இன்று முதல் வரும் ஜூன் மாதம் 13ம் தேதி வரை 100 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. 108 மீ.கன அடிக்கு மிகாமல் நீர் இருப்பின் அளவினை பொருத்து தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விடப்படும். இதனால், வரட்டுப்பள்ளம் பாசன பகுதியில் உள்ள 2924 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாக பயன்பெறும். இதில், மானாவாரி பயிர்களான எள், சோளம், நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களை பயிர் செய்து பயன் பெறலாம்.