திருச்சி, மார்ச் 4: ரங்கம் அரசு மருத்துவமனையின் அவலநிலையை கண்டித்து ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்திட முடிவு செய்துள்ளனர்.ரங்கத்தில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு தினமும் ரங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மண்ணச்சநல்லூர், லால்குடி, சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் ரங்கம் அழகிரிபுரம் பகுதியை சேர்ந்த வசந்தி(45) என்பவர் கடுமையான காய்ச்சல், தலைச்சுற்றல், உடல்வலியுடன் சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனைக்கு வந்தார். அப்போது அங்கு மருத்துவர் இல்லை. அங்கிருந்த ஒரிரு நர்ஸ்கள் மட்டும் அவரை பரிசோதிக்காமல் ஊசி போட்டுவிட்டு மாத்திரை எழுதி கொடுத்ததாக கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், மருத்துவர்கள் இல்லாமல் எப்படி சிகிச்சை அளித்து ஊசி போடலாம் என தகராறில் ஈடுபட்டனர். அதன் பின்பு தனியார் மருத்துவமனைக்கு செல்கிறோம் என்று கூறி அங்கிருந்து அவர்கள் வெளியேறினர்.
இதைப்பார்த்த அங்கு சிகிச்சை பெறும் உள்நோயாளி ஒருவர் நான் கடந்த ஒரு மாதத்திற்கு முன் கால்வலிக்காக இங்கு வந்தேன். வெளியே சென்று ஸ்கேன், ரத்த பரிசோதனைகள் செய்து வருகிறேன். இங்கு ரத்தம் இல்லை என்று கூறியதால் தனியார் வங்கியில் ரத்தம் வாங்கி கொடுத்து ஒருவாரம் ஆகியும் இன்னும் எனக்கு அறுவை சிகிச்சை செய்யவில்லை என சொல்லி புலம்பினார். இதுகுறித்து ஜனநாயக வாலிபர் சங்க ரங்கம் பகுதி செயலாளர் தர்மா கூறுகையில், டாக்டர்கள் சரிவர பணியில் இல்லாததாலும், முறையாக பதில் சொல்லாததாலும் மேலும் சிகிச்சை அளிக்காததாலும் இங்கு வரும் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.இதுபற்றி பலமுறை புகார்கள் அளித்தும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும், பேச்சுவார்த்தை நடத்தியும் எவ்வித பலனும் இல்லை. மீண்டும் இதே நிலை நீடிக்கிறது. இதனை கண்டித்து சுகாதாரத்துறை அமைச்சர் இங்கு வந்து இந்த மருத்துவமனை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும் வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றார்.