×

திருவள்ளூர் ஜெ.என்.சாலை நடைபாதை கடைகளால் விபத்தில் சிக்கும் பாதசாரிகள்: கண்டு ெகாள்ளாத அதிகாரிகள்

திருவள்ளூர், மார்ச் 4: திருவள்ளூரில் நெடுஞ்சாலை நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளால், பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லும் அவலம் ஏற்பட்டு உள்ளதோடு விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. திருவள்ளூர் ஜெ.என்.சாலை, சி.வி.நாயுடு சாலை, ரயில் நிலையம் செல்லும் சாலை ஆகிய பகுதிகளில், மழைநீர் செல்லும் வகையில் ரூ.25 கோடி செலவில் மழைநீர் கால்வாய் கட்டப்பட்டு உள்ளது. மேலும், சாலையின் நடுவில் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டது.
அதோடு, மழைநீர் கால்வாய் மீது பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. அதன்மீது பாதுகாப்பாக மக்கள் நடந்து செல்ல டைல்ஸ் பொருத்தப்பட்டு, ஒருபுறம் கைப்பிடியும் அமைக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில், இச்சாலையோர வியாபாரிகள், தங்களது கடைகளின் முன்பு நடைபாதையை ஆக்கிரமித்து மேற்கூரை அமைத்தும், பொருட்களை வைத்தும் வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால், பொதுமக்கள் நடைபாதையில் செல்ல
முடியாமல், போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் நடந்து செல்லும் நிலை உள்ளது.

இவ்வாறு பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லும்போது, பலர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து வருகின்றனர். சில உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இவ்வாறு ஆக்கிரமிப்பு கடைகளால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதை தினமும் அவ்வழியாக செல்லும் மாவட்ட கலெக்டர், எஸ்.பி., என பல்வேறு துறை அதிகாரிகளும் கண்டும், காணாமல் உள்ளனர். எனவே, சி.வி.நாயுடு சாலை, ஜெ.என்.சாலை, ரயில் நிலைய சாலை ஆகிய பகுதிகளில், நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறை இணைந்து அகற்றி, நடைபாதையை மீட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Pedestrians ,corridor shops ,Tiruvallur JN Road ,
× RELATED அம்பத்தூர்- செங்குன்றம்...