×

கோடை காலம் துவக்கம் எதிரொலி அரவக்குறிச்சி ஒன்றியம் வறட்சியிலிருந்து தப்புமா?

அரவக்குறிச்சி, மார்ச் 4: அரவக்குறிச்சி ஒன்றியத்தில் கோடை காலம் ஆரம்பித்து விட்ட நிலையில் குடிநீர் தட்டுப்பாடு, வறட்சியை சமாளிக்க முன்னெச்சரிக்கையாக பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகங்கள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள எதிர்பார்ப்பில் உள்ளனர். அரவக்குறிச்சி ஒன்றியத்தில் கொடையூர், நாகம்பள்ளி, வெஞ்சமாங்கூடலூர், புங்கம்பாடி, ஈசநத்தம், அம்மாபட்டி, எருமார்பட்டி, சாந்தப்பாடி, கோவிலூர் உள்ளிட்ட 20 ஊராட்சிகளும், அரவக்குறிச்சி, பள்ளபட்டி ஆகிய 2 பேரூராட்சிகளும் உள்ளது. சென்ற 2 ஆண்டுகளில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டது. வெயிலின் தாக்கத்தினால் பல நாட்களாக கடும் வெப்பம் நிலவி வறட்சியின் காரணமாக ஆழ் துளை கிணறுகள் மற்றும் விவசாயக் கிணறுகள் அனைத்தும் வற்றி விட்டன. இதனால் வீடுகளில் உள்ள ஆழ்குழாய் நீர் மட்டம் அதல பாதாளத்திற்கு போய் விட்டது. மாதம் ஒரு முறை மட்டுமே வீடுகளுக்கு குடி நீர் விநியோகிக்கப்பட்டது. அதுவும் போதுமான அளவு இல்லாத நிலை இருந்தது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்கு திண்டாடினர். முதியவர்கள், வயதான பெண்கள் கூட இந்த தண்ணீர் பஞ்சத்தினால் குடத்துடன் வீதி வீதியாக தண்ணீருக்காக அலையும் பரிதாபமான நிலை ஏற்பட்டது.

பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் உள்ள கிராமங்களுக்கு குடி நீர் 20 முதல் 30 நாட்களுக்கு ஒரு முறை விநியோகிக்கபட்டது. இதனால் குடிநீர் பற்றக்குறை ஏற்பட்டு பொதுமக்கள் தண்ணீருக்கு தவித்து வந்தனர். பொதுமக்கள் குடிநீரை விலைக்கு வாங்கி குடிக்க வேண்டிய அவலமான நிலை ஏற்பட்டது. மழை பொழிவு மிகக்குறைவின் காரணமாக இந்த ஆண்டும் அதே போல் வறட்சி இருக்கும் என்று எதிர்பார்க்கப்டுகின்றது. இப்போதே விவசாயக் கிணறுகள், போர்வெல்கள் போன்ற நீர்நிலைகளில் தண்ணீர் குறையத் தொடங்கியுள்ளது. இதனால் பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகங்கள் நீராதாரங்களை மேம்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.. தெருக்களில் உள்ள பிளாஸ்டிக் தொட்டிகளுக்கு தண்ணீர் நிரப்பும் ஆழ் குழாய் கிணறுகளின் ஆழத்தை அதிகப்படுத்தியும், அதிலுள்ள பைப்புகளின் நீளத்தை அதிகப்படுத்தியும், பழுதடைந்த மின் மோட்டார்களை சரி செய்தும், புதிய ஆழ்குழாய் கிணறுகள் அமைத்தும் பொதுமக்களுக்கு தடையில்லாமல் வரும் கோடையில் போதுமான தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தெருக்களில் உள்ள பிளாஸ்டிக் தொட்டிகளை கண்காணித்து தண்ணீர் வீணாகாமல் திருகுகள் ஒழுகாமல் சரியான முறையில் உள்ளதா என்று கண்டறிந்து அதனை சீரமைக்க வேண்டும். இவ்வாறு கோடை காலம் ஆரம்பித்து விட்ட நிலையில் சென்ற ஆண்டுகளைப் போல பொதுமக்களை குடிநீருக்கு அலைய வைக்காமல் வறட்சியை சமாளிக்க முன்னெச்சரிக்கையாக நீராதாரங்களை கண்காணித்து மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகங்கள் போர்க்கால அடிப்படையில் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Tags : drought ,Aravurichi Union ,
× RELATED வறட்சியை நோக்கி நகரும் பெங்களூரு.. தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் அவதி!!