திருப்பூர், மார்ச் 4: இன்று துவங்கும் பிளஸ்-1 பொதுத்தேர்வை திருப்பூர் மாவட்டத்தில் 26 ஆயிரத்து 92 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். தமிழ்நாடு அரசு தேர்வுத்துறையால் நடத்தப்படும் மார்ச் 2020-க்கான பிளஸ்-1 பொதுத்தேர்வு இன்று (மார்ச் 4ம் தேதி) தொடங்கி 26ம் தேதி வரை நடக்கிறது. பிளஸ்-1 பொதுத்தேர்வினை திருப்பூர் மாவட்டத்தில் 88 தேர்வு மையங்களில் 215 மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 11,767 மாணவர்களும், 14,144 மாணவிகளும் என மொத்தம் 25,911 மாணவ, மாணவிகளும், தனித் தேர்வர்களாக 181 மாணவ, மாணவிகளும் என ஆக மொத்தம் 26,092 பேர் தேர்வெழுத உள்ளனர். தேர்வு மையங்களில் பணியாற்ற முதன்மைக் கண்காணிப்பாளர்களாக 88 தலைமை ஆசிரியர்களும், துறை அலுவலர், கூடுதல் துறை அலுவலர்களாக 89 ஆசிரியர்களும், துறை அலுவலர்கள், அறைக் கண்காணிப்பாளர்களாகப் பணியாற்ற 1,548 ஆசிரியர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.