×

விபத்து ஏற்படுவதை தடுக்க தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் ரவுண்டானா பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ஆர்.எஸ்.மங்கலம் மார்ச் 4: ஆர்.எஸ்.மங்கலத்தில் திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையின் சந்திப்பில் ரவுண்டானா அமைத்து விபத்து தடுக்கப்படுமா? என பெரும் எதிர்பார்ப்புடன் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் ஆர்.எஸ்.மங்கலம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். தற்பொழுது நாளுக்கு நாள் வாகனங்கள் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள முக்கிய புனித ஸ்தலங்கள் ராமேஸ்வரம், சேதுக்கரை, திருப்புல்லாணி, உத்தரகோசமங்கை போன்ற திருத்தலங்களுக்கும் தேவிபட்டினம் போன்ற நவபாசன தலத்திற்கும் இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி தமிழகத்தில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், வட மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பேர் வரும் மிகவும் முக்கியமான சாலையாக திருச்சி-ராமேஸ்வரம் சாலை உள்ளது.
இந்த தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஆர்.எஸ்.மங்கலம் செல்வதற்கு பிரிந்து செல்லும் இடத்தில் வாகனங்கள் திரும்பும் பொழுது அடிக்கடி விபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்சமயம் இந்த தேசிய நெடுஞ்சாலை விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வருகின்றது. ஆகையால் இந்த விரிவாக்கம் பணி நடைபெறும் போதே அந்த இடத்தில் ரவுண்டானா அமைப்பது மிகவும் எளிது. எனவே வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும், இடையூறு ஏற்படாத வண்ணம் ஒரு ரவுண்டானாவை அமைத்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாதபடி மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுபற்றி வாகன ஓட்டிகள் கூறுகையில், இந்த சாலை இப்பொழுது அதிகமான போக்குவரத்து நிறைந்த சாலையாக மாறி விட்டது. இதனால் எதிர் வரும் வாகனங்கள் ஒரே நேரத்தில் திரும்புவதாலும், எதிர்வரும் வாகனங்கள் தெரியாததாலும் விபத்துகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. உதாரணமாக திருச்சியிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் பேருந்து நிலையத்திற்கு உள்ளே சென்று விட்டு திரும்பி செல்வது வழக்கமாக உள்ளது. அவ்வாறு பேருந்து நிலையத்திற்கு சென்று வந்த பேருந்து அல்லது வேறு வாகனங்களை தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் திரும்பும் பொழுது எதிர்பாராதவிதமாக விபத்துகள் ஏற்பட்டு விடுகிறது.

ராமேஸ்வரம், திருப்புலாணி, தேவிபட்டினம் போன்ற ஊர்களில் உள்ள கோவிலுக்கு பக்தர்கள் அதிகமாக சென்று வரும் காலம் என்பது குறிப்படத்தக்கது. எனவே இதனை தவிர்க்கும் விதமாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ் சாலையில் ஒரு ரவுண்டானாவை அமைத்து விபத்துகள் நடைபெறாமல் தடுக்க நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : accidents ,National Highway Meeting ,
× RELATED இரு வேறு விபத்துகளில் வாட்ச்மேன் உட்பட இருவர் பலி