×

பல்லடம் அருகே பூமலூர் நூற்பாலையில் பயங்கர தீ விபத்து

பொங்கலூர், மார்ச் 4:  பல்லடம் அருகே பூமலூரில் நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில்  இயந்திரங்கள், பஞ்சு, நூல் மூடைகள் எரிந்து சேதமானது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மங்கலம் சுல்தான்பேட்டையைச் சேர்ந்தவர் சிவபிரகாஷ். இவர் திருப்பூர் பாரப்பாளையத்தைச் சேர்ந்த செந்தில்வடிவு என்பவருக்கு சொந்தமான இடம் பூமலூர் கூட்டுறவு சொசைட்டி அருகே உள்ளது. அங்கு நில வாடகைக்கு நூற்பாலை நடத்தி வருகிறார். இதில் தென்மாவட்டம் மற்றும் உள்ளூரைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது பஞ்சு அரவை இயந்திரத்தில் இருந்து புகை வந்ததால் தொழிலாளர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பியோடினர். இதனிடையே காற்றின் வேகம் காரணமாக தீ கொளுந்துவிட்டு எரிந்து பரவத்தொடங்கியது. இது குறித்து தகவலறிந்த பல்லடம், திருப்பூர், அவிநாசி பகுதி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். தனியார் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைத்தனர். இந்த பயங்கர தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான 200 பஞ்சு பேல் மூடைகள், இயந்திரங்கள், உதிரி பாகங்கள், கட்டிடம் உள்ளிட்டவை முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. மங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : spinning yard ,Palladam ,
× RELATED திருநங்கையை தாக்கியவர் கைது