திண்டுக்கல், மார்ச் 4: திண்டுக்கல் போக்குவரத்து கழக பணிமனை முன்பு பஞ்சப்படி அரியர்ஸ் உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திண்டுக்கல்- நத்தம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு எல்பிஎப், சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எல்பிஎப் கிளை தலைவர் ஜோசப் நிக்சன் தலைமை வகித்தார். சிஐடியு கிளை செயலாளர் வாசுதேவன் முன்னிலை வகித்தார். சிஐடியு மண்டல தலைவர் ஜெயக்குமார், மண்டல பொருளாளர் ஜோசப் அருளானந்தம், எல்பிஎப் மண்டல பொதுச் செயலாளர் ராஜேந்திரகுமார், ஏஐடியுசி மண்டல துணை தலைவர் ஐயப்பன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே துவங்க வேண்டும். பஞ்சப்படி அரியர்ஸை உடனே வழங்க வேண்டும். 240 நாள் பணி முடிந்த அனைவரையும் பணி நிரந்தரம் செய்திட வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வுபெறும் நாளன்றே பணப்பலன்களை வழங்க வேண்டும்.1.4.2003க்கு பின்பு பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் அனைவரையும் பழைய பென்சன் திட்டத்தில் இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் போக்குவரத்து கழக தொழிற்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.