×

(தி.மலை) அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு தரிசனத்துக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரணை



திருவண்ணாமலை, மார்ச் 4: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், சிறப்பு தரிசனத்துக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், சிறப்பு தரிசனம் செய்யும் பக்தர்களிடம் கட்டணம் வசூலிப்பதாகவும், அதனால் பொது தரிசனம் செய்யும் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்படுவதாகவும் அறநிலையத்துறைக்கு பக்தர்கள் தரப்பில் புகார் தெரிவித்துள்ளனர். அதைத்தொடர்ந்து, அறநிலையத்துறை ஆணையரின் உத்தரவின்படி, இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் ஆய்வாளர்கள் நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர்.

அப்போது, தரிசன டிக்கெட் வழங்கும் மற்றும் சிறப்பு தரிசனத்துக்கு அனுமதி வழங்கும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், முக்கிய பிரமுகர்களின் பரிந்துரை கடிதம் அடிப்படையில் மட்டுமே, சிறப்பு தரிசனம் அனுமதிக்கப்படுவதாகவும், அதற்கான பதிவேடு பராமரிக்கப்பட்டு, முறையாக கையொப்பம் பெறுவதாகவும் ஊழியர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர். மேலும், அபிஷேகத்தின்போது கூடுதலாக அனுமதிக்கும் பக்தர்களிடம் முறையாக கட்டணம் வசூலிப்பதாகவும், அதற்கான பதிவேடும் கோயில் நிர்வாகத்தின் மூலம் பராமரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தரிசனத்துக்கு அனுமதிக்கப்படும் வழிகளில், கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டு, கோயில் நிர்வாக அலுவலகத்தில் கண்காணிக்கப்படுவதை அதிகாரிகள் பார்வையிட்டனர்.

Tags : darshan ,Annamalaiyar temple ,Investigations ,Immigration Department ,
× RELATED அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜை...