சேத்துப்பட்டு, மார்ச் 4: சேத்துப்பட்டு அடுத்த வடவெட்டி அங்காளம்மன் கோயிலில் கடந்த 22ம் தேதி மாசி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, கோயில் அருகே உள்ள வல்ல குளத்தில் நேற்று முன்தினம் மாலை தெப்பல் உற்சவம் நடந்தது. முன்னதாக குளக்கரையில் சிவன், பார்வதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதைத்தொடர்ந்து குளத்தில் மலர்கள், மின்சார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் அங்காளம்மன் சிவன், பார்வதி திருமண கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர், வீதி உலாவும் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சென்னை, வேலூர், காஞ்சிபுரம், திண்டிவனம், புதுச்சேரி மற்றும் சேலம் உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.