தூத்துக்குடி, மார்ச் 4: உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடி பட்டியல் தொடர்பாக அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆலோசனை மேற்கொண்டார். தூத்துக்குடி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடி பட்டியல் தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்து பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள, தூத்துக்குடி மாநகராட்சி, கோவில்பட்டி நகராட்சி, காயல்பட்டினம் நகராட்சி மற்றும் 19 பேரூராட்சிகளில் உள்ள 721 வாக்குச்சாவடி மையத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதில் 6,32,479 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளார்கள்.
நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளபடி மின்னனு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என மொத்தம் 721 பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான வாக்குச்சாவடி பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளபடி, 1,350 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை பிரிக்கப்படும். மேலும், வாக்குச்சாவடி மையங்களில் தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வாக்குச்சாவடி மையங்கள் தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனை மற்றும் அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும். வாக்காளர் பட்டியல் தொடர்பாக விரைவில் கூட்டம் நடத்தப்படும். வாக்காளர் பட்டியலில் ஏதேனும் பகுதி விடுபட்டோ, கூடுதலாக சேர்க்கப்பட்டு பிரிக்கப்பட்டிருந்தால் அதுகுறித்து தங்களது கருத்துகளை தெரிவிக்க வேண்டும், என்றார்.
கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன், சப்-கலெக்டர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சந்திரசேகர் மற்றும் நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.