சாத்தான்குளம், மார்ச் 4: சாத்தான்குளம் ஒன்றியம் பன்னம்பாறை விலக்கில் இருந்து செட்டிக்குளம், பேய்க்குளம் வழியாக நெல்லை செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலை வழியாக அரசு பஸ் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இரு சக்கர வாகனத்திலும் ஏராளமானோர் செல்கின்றனர். இதில் பன்னம்பாறை விலக்கில் இருந்து அமுதுண்ணாக்குடி விலக்கு இடையே சுமார் 200 மீட்டர் தூரம்வரை சாலை சிதைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இருசக்கரத்தில் செல்பவர்கள், பலர் தடுமாறி கீழே விழும் நிலை காணப்படுகிறது.
இந்த சாலையை நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைத்து சென்றாலும், அதில் செல்லும் கனரக வாகனங்களால் உடனடியாக சாலை மீண்டும் சேதமடைகிறது. எனவே நெடுஞ்சாலைத்துறை உயரதிகாரிகள் பார்வையிட்டு சாலை அடிக்கடி பழுதாவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். அவர்கள் கூறுகையில், செட்டிக்குளம் பகுதியில் கடந்த மாதம் சாலை சீரமைக்கப்பட்டது. ஆனால் பன்னம்பாறை - செட்டிக்குளம் இடையே 200 மீட்டர் தூரம் சாலை பழுதுபட்டு காணப்படுகிறது.
இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் வாகனத்தில் வருவோர் பாதிக்கப்படும் நிலை தொடர்கிறது. இந்த சாலையில் கனரக வாகனங்கள் அதிகம் செல்வதால் கனரக வாகனம் சென்று திரும்பும்வகையில் சாலையை அமைக்க வேண்டும், என்றார்.