திருப்போரூர், மார்ச் 1: திருப்போரூர் - நெம்மேலி சாலையோரத்தில், காலாவதியான மருந்துகள், மருத்துவக் கழிவுகளை தனியார் மருத்துவமனையை சேர்ந்தவர்கள், கொட்டி சென்றனர்.பழைய மாமல்லபுரம் சாலையையும், கிழக்கு கடற்கரை சாலையையும் இணைக்கும் வகையில் திருப்போரூர் - நெம்மேலி இடையே 3 கிமீ தூரத்துக்கு சாலையும், பக்கிங்காம் கால்வாயில் பாலமும் உள்ளது.இச்சாலையின் இருபுறமும் உப்பளம் மற்றும் முகத்துவாரம் உள்ளது. உப்பளத்துக்கு செல்ல பல்வேறு இடங்களில் குறுக்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது உப்பள ஒப்பந்தம் முடிந்து விட்டதால், கடந்த 6 ஆண்டுகளாக உப்பளத்தில் உப்பு உற்பத்தி பணிகள் எதுவும் நடக்கவில்லை. இதனால், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், ரெஸ்டாரன்ட்கள் ஆகியவற்றில் இருந்து உணவு கழிவுகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் ஆகியவற்றை வாகனங்களில் கொண்டு வந்து கொட்டி செல்கின்றனர்.
இந்நிலையில் அப்பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்ள சென்ற சிலர் உட்புற சாலையோரத்தில் காலாவதியான மருந்துகள், மருத்துவக் கழிவுகளை சிலர் கொட்டி சென்றிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அனைத்து மருந்துகளும், தனியார் மருத்துவமனையில் பயன்படுத்தப்படுபவை. அதில், அரசு முத்திரை எதுவும் இல்லை என்பதை தெரிந்தது.தகவலறிந்து அங்கு சென்ற சமூக ஆர்வலர்கள், அதனை படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் இதுபோன்று மருத்துவ கழிவுகளையும், காலாவதியான மருந்துகளையும் கொட்டிச் சென்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.