×

ராஜபாளையத்தில் வீட்டில் பற்றிய தீயால் தங்க நகை, பணம் நாசம்

ராஜபாளையம், மார்ச் 3: ராஜபாளையத்தில் உள்ள ஞானசம்பந்தர் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் (38). திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளரான இவர், முடங்கியாறு சாலையில் உள்ள பொன்விழா மைதானம் அருகே பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இவர் வசிக்கும் வீட்டின் அருகே புதிதாக வீடு கட்டி வருகிறார். இதற்காக வெளியூரில் இருந்த நிலத்தை விற்று சுமார் ரூ.5 லட்சம் வரை மாடியில் இருந்த பீரோவில் வைத்திருந்தார். மேலும் வீட்டுபத்திரம் உள்ளிட்ட ஆவணங்களுடன், சுமார் 15 பவுன் நகை, பட்டு புடவைகள் உள்ளிட்ட உடைகளும் இரண்டு பீரோக்களில் வைத்திருந்துள்ளார்.நேற்று மாலை திடீரென மாடியில் வேயப்பட்டிருந்த கூரையில் தீ பிடித்துள்ளது. இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். நிலைய அதிகாரி ஜெயராம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் தீ மாடி முழுவதும் பற்றியது. இதன் பின் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை வீரர்கள் கட்டுப்படுத்தினர். விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் ரொக்க பணம், பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள், தங்க நகைகள் எரிந்து சாம்பலானது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Rajapalayam ,
× RELATED ராஜபாளையம் தொகுதியில் புதிதாக அரசு...