ராஜபாளையம், மார்ச் 3: ராஜபாளையத்தில் சாலையோர மரம் ஒன்றில் மோதிய லாரி, கோயில் வளாகத்துக்குள் புகுந்தது. இதனால் மரம் வேருடன் சாய்ந்து சாலையில் விழுந்ததால் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவில்லிபுத்தூரை சேர்ந்தவர் லாரி டிரைவர் ஜோதிலிங்கம். இவர் தென்காசி மாவட்டம் சிவகிரியில் இருந்து திருவில்லிபுத்தூர் அடுத்து உள்ள திருவண்ணாமலை பகுதிக்கு செங்கல் சூளைக்கு தேவையான மண்ணை, லாரியில் ஏற்றி வந்தார். லாரி ராஜபாளையம் - மதுரை சாலையில் உள்ள மாயூரநாதர் சுவாமி கோயில் முகப்பில், உள்ள ஆதி வழிவிடு விநாயகர் கோயில் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலையோரம் இருந்த வேப்பமரத்தில் மோதி, கோயில் சுவரில் முட்டி நின்றது. இந்த விபத்தில் மரம் வேருடன் சாய்ந்த நிலையில், கோயில் சுவரும் சேதமடைந்தது. உடைந்த மரம் தென்காசி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மரத்தை வெட்டி அகற்றினர். பின் சுமார் அரை மணி நேரத்திற்கு அடுத்து போக்குவரத்து சீரானது. இக்கோயில் இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் ராமராஜ் கோயிலை பராமரித்து வருகிறார்.அவர் கூறுகையில், நேற்று காலை விபத்து நடந்த பகுதிக்கு அருகே பள்ளி மற்றும் தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. இவ்விபத்து நடைபெறுவதற்கு சில மணித்துளிகளுக்கு முன் இப்பகுதியில் அதிக மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இருந்தது. இதனால் உயிர்சேதம் ஏற்படாத நிலை ஏற்பட்டது. எனவே, உடனடியாக இப்பகுதியிய்ல சாலை விரிவாக்கப் பணியை உடனடியாக செய்து தரவேண்டும் என கூறினார்.