திண்டுக்கல், மார்ச் 3: பிளஸ் 2 தேர்வு துவங்கிய நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று நடந்த தமிழ் தேர்விற்கு 1189 பேர் வராமல் ஆப்சென்ட் ஆகினர். தமிழகத்தில் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நேற்று துவங்கி மார்ச் 24ம் தேதி வரை நடைபெறுகிறது. திண்டுக்கல் வருவாய் மாவட்டத்தை பொறுத்தவரை திண்டுக்கல், பழநி, வத்தலக்குண்டு, வேடசந்தூர் ஆகிய 4 கல்வி மாவட்டங்களில் 12ம் வகுப்பு தேர்வை 87 தேர்வு மையங்களில் 9594 மாணவர்கள், 10, 906 மாணவிகள், 417 தனித்தேர்வர்கள் என மொத்தம் 20,917 பேர் தேர்வு எழுதுகின்றனர்.தேர்வு நடைபெறும் மையங்களுக்கு முதன்மை கண்காணிப்பாளர்களாக 87 பள்ளி தலைமை ஆசிரியர்கள், 87 துறை அலுவலர்கள், 400 தேர்வர்களுக்கு மேல் தேர்வு எழுதும் 10 மையங்களில் கூடுதலாக முதன்மை கண்காணிப்பாளர்களும் 10 கூடுதல் துறை அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் அறை கண்காணிப்பாளர்களாக 1, 423 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு சொல்வதை எழுதுபவராக 48 ஆசிரியர்களும், 174 அலுவலக பணியாளர்கள் தேர்வு மையங்களில் முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கு உதவியாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். அனைத்து தேர்வு மையங்களுக்கும் காவல்துறை மூலம் காவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வினாத்தாள் கட்டுக்கள் 9 மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 22 வழித்தடங்களில் அலுவலர்கள் மூலம் சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
இத்தேர்வினை கண்காணிக்கும் வகையில் முதன்மைக்கல்வி அலுவலர் தலைமையில், 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு தேர்வு மையங்களை திடீர் ஆய்வு மேற்கொள்ளும். மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர், 4 மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் 2 மாவட்ட திட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் (ஒருங்கிணைந்த கல்வித்திட்டம்) தலைமையில் இக்குழு செயல்படும். ஒட்டுமொத்த வருவாய் மாவட்டத்தில் நடைபெறும் பொதுத்தேர்வுகளை கண்காணிக்கும் வகையில் இணை இயக்குநர் (மேல்நிலை) அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நேற்று நடந்த தமிழ் தேர்வினை 20, 598 மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் 616 மாணவர்கள், 573 மாணவிகள் என 1189 பேர் தேர்வுக்கு வராமல் ஆப்சென்ட் ஆகினர். திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள அங்குவிலாஸ் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தை நேற்று மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி பார்வையிட்டார். இதேபோல் அருகாமையில் உள்ள தேர்வு மையங்களை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மணிவண்ணன் ஆய்வு செய்தார்.