பள்ளிபாளையம், மார்ச் 3: பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகத்தில், வரைவு வாக்காளர் பட்டியல், வரைவு வாக்குச்சாவடி தொடர்பாக அனைத்து கட்சி பிரமுகர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் ஊராட்சி தேர்தலை தொடர்ந்து, நகராட்சி பகுதிகளுக்கான தேர்தலுக்கான வாக்குசாவடி வரையறைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 2 ஆயிரம் வாக்காளர்களுக்கும் கூடுதலாக உள்ள வார்டுகள் பிரிக்கப்பட்டு, வாக்காளர்கள் எளிதாக வாக்களிக்கும் வகையில் புதிய வாக்குச்சாவடிகள் வரையறை செய்யப்பட்டு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் தொடர்பாக அரசியல் கட்சியினரின் கருத்து கேட்கும் பொருட்டு, பள்ளிபாளையம் நகராட்சியில் அனைத்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் இளவரசன், நகராட்சி பொறியாளர் சரவணன் ஆகியோர், தற்போது வரையறை செய்யப்பட்டுள்ள வாக்குசாவடிகள் குறித்த விபரங்களை தெரிவித்தனர்.
பெண்களுக்கான வாக்குச்சாவடி எண் 6 ஐ, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாற்றம் செய்யப்பட்டதை அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக அனைத்து கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைகள் கேட்கப்பட்டது. கூட்டத்தில் வாக்குசாவடி தொடர்பான ஆட்சேபனை ஏதும் பெறப்படவில்லை. வரும் 5ம் தேதி வாக்குச்சாவடி வரைவு பட்டியவை கலெக்டர் வெளியிட இருப்பதால், கட்சி பிரமுகர்களின் கவனத்திற்கு இந்த பட்டியல் கொண்டு வரப்பட்டுள்ளது. கூட்டத்தில் திமுக நகர செயலாளர் ரவிச்சந்திரன், அதிமுக நகர செயலாளர் வெள்ளியங்கிரி, கொமதேக வெங்கடேஷ், தேமுதிக பூபதி, மதிமுக சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.