பள்ளிபாளையம், மார்ச்3: பள்ளிபாளையம் அருகே ஓடப்பள்ளி அக்ரஹாரம் கிராமத்தில், பொதுப்பணித்துறை அனுமதி பெறாமல் இயங்கி வந்த தனியார் குடிநீர் ஆலைக்கு தாசில்தார் சீல் வைத்தார். தமிழகம் முழுவதுமாக சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, குமாரபாளையம் தாலுகாவில் உள்ள குடிநீர் நிறுவனங்களை, தாசில்தார் தங்கம் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். நேற்று பள்ளிபாளையம் அடுத்த ஓடப்பள்ளி அக்ரஹாரம் கிராமத்தில் உள்ள தனியார் குடிநீர் நிறுவனத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த நிறுவனம் பொதுப்பணித்துறையின் அனுமதி பெறாமல், சட்ட விரோதமாக தண்ணீரை உறிஞ்சி எடுத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த நிறுவனம் குறித்து, கலெக்டருக்கு தெரிவித்தனர். பின்னர், கலெக்டர் மெகராஜின் உத்தரவை அடுத்து குமாரபாளையம் தாசில்தார் தங்கம் தலைமையிலான தனிப்படையினர், ஓடப்பள்ளி அக்ரஹாரத்தில் செயல்பட்டு வந்த தனியார் குடிநீர் உற்பத்தி ஆலைக்கு சீல் வைத்தனர்.