×

தர்மபுரி அருகே தேசிய நெடுஞ்சாலை

பணிகள் 85 சதவீதம் நிறைவுதர்மபுரி, மார்ச் 3: தர்மபுரி அருகே, தேசிய நெடுஞ்சாலை பணிகள் 85 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது என சேலம் தேசிய நெடுஞ்சாலை கண்காணிப்பு பொறியாளர் தெரிவித்துள்ளார். தர்மபுரி மாவட்டம், மதிகோண்பாளையத்தில் தேசிய நெடுஞ்சாலை சார்பில், ₹25.68 கோடி மதிப்பில் மதிகோண்பாளையம் முதல் நாயக்கன்கொட்டாய் வரை, 7 கிலா மீட்டர் தொலைவிற்கு நடைபெற்று வரும் சாலை பணிகளை, சேலம் தேசிய நெடுஞ்சாலை கண்காணிப்பு பொறியாளர் சரவணன் நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது: தர்மபுரி - திருப்பத்தூர் சாலை மதிகோண்பாளையம் முதல் நாயக்கன்கொட்டாய் வரை, 7 கிலோ மீட்டர் வரை சாலை  நான்கு வழித்தடமாக அகலப்படுத்தி மேம்பாடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஓகேனக்கல்,  பென்னாகரம்- தர்மபுரி- திருப்பத்தூர் சாலை முக்கிய சுற்றுலா தலமான ஒகேனக்கல்லில் ஆரம்பமாகி, பென்னாகரம் தர்மபுரி வழியாக திருப்பத்தூரில் இணைகிறது.

இச்சாலை தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களின் வழியே செல்கிறது. தற்போது 85 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. மத்திய சாலை நிதித்திட்டம் 2018-2019ல் மேற்கொள்ளப்படும் இப்பணி மார்ச் மாத இறுதிக்குள் நிறைவு பெறும். இச்சாலையில் ஒரு சிறுபாலத்தை மறுசீரமைப்பு செய்தல், 3 சிறுபாலத்தை அகலப்படுத்துதல், ஒரு கூடுதல் பாலம் அமைத்தல், 1250 மீட்டர் நீளத்திற்கு தடுப்புச்சுவர் அமைத்தல், 6,800 மீட்டர் தொலைவிற்கு சென்டர் மீடியன் அமைத்தல் ஆகிய பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது, கோட்ட பொறியாளர் (தரக்கட்டுப்பாடு) துரை, தேசிய நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் லோகநாதன், உதவி கோட்ட பொறியாளர் ஜெயக்குமார், உதவி பொறியாளர்கள் தனசேகர், ஞானசேகர், சாலை ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.

Tags : National Highway ,Dharmapuri ,
× RELATED சென்னை – பெங்களூரு தேசிய...