கரூர், மார்ச் 3: தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பொங்கல் போனஸ் ஜனவரிமாத ஊதியம் வழங்காததை கண்டித்து கரூர் வட்டார கல்வி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வட்டாரத் தலைவர் அருள் குழந்தை தேவதாஸ் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் செல்வம் வரவேற்றார்.
மாவட்ட துணைச் செயலாளர்கள் சின்னுசாமி, தமிழரசி, காமராஜ், நகரத் தலைவர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார செயலாளர் பிரான்சிஸ் டேனியல் ராஜா, மாவட்ட தலைவர் காளிதாஸ், மாவட்ட செயலாளர் ஜெயராஜ், மாவட்ட பொருளாளர் மோகன் ஆகியோர் ஆர்ப்பாட்டம் குறித்து பேசினர். வட்டார பொருளாளர் சீனிவாசன் நன்றி கூறினார். தமிழக அரசு அறிவித்த பொங்கல் போனஸ் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், கரூர் நகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு ஜனவரி மாத ஊதியம் விரைவில் வழங்க வேண்டும், மாதாந்திர குறைதீர் நாளில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.