ஜெயங்கொண்டம், மார்ச் 3: ஜெயங்கொண்டத்தில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான மரத்தை வெட்டிய அமமுக நிர்வாகியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அமமுக நிர்வாகி தேவா என்பவருக்கு சொந்தமாக ஜெயங்கொண்டம்-கும்பகோணம் சாலையில், பெட்ரோல் பங்க் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொழிற்சாலை, திருமண மண்டபம் உள்ளன. இவரது திருமண மண்டபத்திற்கு எதிரே கரடிகுளம் பஸ் ஸ்டாப்பும், அதன் ஓரத்தில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான மரமும் உள்ளது. பஸ் ஸ்டாண்டிற்கு வரும் பொதுமக்கள் அதன் அருகே உள்ள மர நிழலில் இளைப்பாறுவது வழக்கம். திருமண மண்டபத்திற்கு வரும் கார்கள் நெடுஞ்சாலையின் ஓரத்தில் நிறுத்த இட பற்றாக்குறை ஏற்பட்டதாக கூறி அமமுக நிர்வாகி நேற்று மாலை தனது ஆட்களை வைத்துக்கொண்டு மரத்தை வெட்டியதாக கூறப்படுகிறது.
மரம் வெட்டப்படுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கரடிகுளம் பகுதி பொதுமக்கள், அமமுக பிரமுகரை கைது செய்ய வலியுறுத்தி, நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்கக் கோரி ஜெயங்கொண்டம்-கும்பகோணம் சாலையில் கரடிகுளம் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் சப்-இன்ஸ்பெக்டர்கள் நடேசன், முருகன், ரவிச்சந்திரன், ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நெடுஞ்சாலைத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும், சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில், பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் ஜெயங்கொண்டம்- கும்பகோணம் நெடுஞ்சாலையில், சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.