தஞ்சை, மார்ச் 3: தஞ்சையில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் மற்றும் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் மகளிருக்கான விழிப்புணர்வு தொடர்பான பெருமை நடைபயணம் நடந்தது. தஞ்சை ரயில் நிலையத்தில் இருந்து துவங்கிய நடைபயணத்துக்கு ஆர்டிஓ வேலுமணி தலைமை வகித்தார். மாவட்ட சமூக நல அலுவலர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். பழைய பேருந்து நிலையம் வரை பெருமை நடைபயணம் நடந்தது. இதில் ஒருங்கிணைந்த சேவை மைய பணியாளர்களால் பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் குறித்தான கோஷம் எழுப்பப்பட்டது. இந்த நடைபயணத்தில் மகிளா சக்திகேந்திரா பணியாளர்கள், சமூக நலத்துறை பணியாளர்கள், தஞ்சை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணியாளர்கள், சுவதார்ஹோம், பெதஸ்தா ஹோம் பெண்கள் மற்றும் குழந்தைகள், பொதுமக்கள் என 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.