×

திசையன்விளையில் அய்யா வைகுண்டர் அவதார தின விழா பேரணிக்கு வரவேற்பு

திசையன்விளை, மார்ச் 3: அய்யா வைகுண்டர் 188வது அவதார தின விழாவை முன்னிட்டு திசையன்விளை வந்த வாகன பேரணிக்கு ஊர் எல்லையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. திருச்செந்தூரில் இருந்து புறப்பட்ட பேரணி காயாமொழி, உடன்குடி, தண்டுபத்து, தட்டார்மடம், நடுவக்குறிச்சி வழியாக திசையன்விளை வந்தடைந்தது. பேரணிக்கு தலைமை வகித்து வந்த பூஜிதகுரு டாக்டர் வைகுந்தையும், அன்புக்கொடி மக்களையும் ஊர் எல்லையில் எருமைகுளம் மன் நாராயண சுவாமி நிழல் தாங்கல் சார்பில் குருசாமி சகோதரர்கள் வரவேற்றனர்.

வரவேற்பு நிகழ்ச்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் பாலன், அதிமுக மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை தலைவர் அல்அமீன் முகமது அலி, சமக ஒன்றிய செயலாளர் சரவணகுமார், காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் விஜயபெருமாள் உட்பட பலர் வரவேற்றனர். தொடர்ந்து மேளதாளம், செண்டாமேளம், வாணவேடிக்கை முழங்க சிறுமியர் கோலாட்டத்துடன் யானை முன்செல்ல பட்டு குடை பிடித்தபடி நடைபயண ஊர்வலம் சென்றது.

காமராஜர் சிலை அருகே திமுக முன்னாள் ஒன்றிய இளைஞரணி செயலாளர் அனிதா பிரின்ஸ் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது. பேரணி உடன்குடிரோடு, பேரூந்து நிலையம், மெயின்பஜார் வழியாக எருமைகுளம் சென்றடைந்தது. அங்குள்ள மன் நாராயணசுவாமி நிழல்தாங்கலில் அய்யாவுக்கு பணிவிடையும், அன்னதர்மமும் நடந்தது. தொடர்ந்து பேரணி நவ்வலடி, கூடன்குளம், செட்டிகுளம், அஞ்சுகிராமம், மயிலாடி வழியாக நாகர்கோவில் சென்றடைந்தது. இன்று (3ம் தேதி) காலை நாகர்கோவிலில் இருந்து பேரணி புறப்பட்டு சுசீந்திரம், தாமரைகுளம் வழியாக சுவாமித்தோப்பு தலைமைபதி சென்றடைகிறது.

Tags : Ayya Vaikundar Avatar Day Ceremony Rally ,
× RELATED விஷம் குடித்த தொழிலாளி சாவு