சென்னை, மார்ச் 2: காதலிக்க வலியுறுத்தி பள்ளி மாணவியை தொந்தரவு செய்த டான்ஸ் மாஸ்டரை போலீசார் கைது செய்தனர்.திருவேற்காடு ராஜரத்தினம் நகர் 3வது தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (26). இவர் கிண்டி ஈக்க்காட்டுதாங்கலில் உள்ள ஒரு டான்ஸ் பள்ளியில் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இங்கு, கடந்த 6 மாதங்களாக டான்ஸ் வகுப்புக்கு வரும் மாணவியை இவர் காதலிப்பதாக கூறியுள்ளார். இவரது காதலை அந்த மாணவி ஏற்க மறுத்துள்ளார். ஆனாலும், மணிகண்டன் தொடர்ந்து மாணவியை தொந்தரவு செய்துள்ளார்.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மாணவி சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். உடனே மாணவியின் பெற்றோர் சம்பவம் குறித்து சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது டான்ஸ் மாஸ்டர் மணிகண்டன், மாணவி பின் தொடர்ந்து தன்னை காதலிக்கும்படி தொந்தரவு செய்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் மணிகண்டனை நேற்று முன்தினம் அதிரடியாக கைது செய்தனர்.