குமாரபாளையம், மார்ச் 2: குமாரபாளையம் பகுதியில் பயன்படாத ஆழ்துளை கிணறுகளில் சாயக்கழிவு நீரை கலந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். குமாரபாளையம் சுந்தரம் காலனி பகுதியில் உள்ள ஒரு ஆழ்துளை கிணற்றில் கடந்த ஒருவாரமாக தண்ணீர் நிறம் மாறி வந்துள்ளது. இதனால், அதிர்ச்சிக்குள்ளான அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அதிகாரியிடம் புகார் செய்துள்ளனர். மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அதிரடி நடவடிக்கையால் கடந்த வாரம் குமாரபாளையம் பகுதியில் 30 சாயப்பட்டறைகள் அகற்றப்பட்டன. ஆனாலும் சில சாயப்பட்டறைகள் விதி மீறி இயங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், ஆழ்துளை கிணற்றில் சாயக்கழிவு கலந்து தண்ணீர் நிறம் மாறி வெளியேற்றி வருகிறது. சாக்கடையில் கழிவுகளை வெளியேற்றினால் அதிகாரிகள் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பார்கள் என்பதால், பயன்படாத ஆழ்துளை கிணறுகளில் கழிவுநீரை கலந்திருக்கலாமென அப்பகுதி மக்கள் பரபரப்பு புகார் தெரிவிக்கின்றனர்.