தக்கலை, மார்ச் 1: தக்கலை அருகே முளகுமூடு கூனிமாவிளை பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டஸ் பிரபின்(51). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி அல்லி ஜெயராணி(45). குலசேகரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ஜஸ்டஸ் பிரபின் தனது மனைவியுடன் முளகுமூட்டில் இருந்து பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். முளகுமூடு சந்திப்பு அருகே சென்றபோது பின்னால் , மார்த்தாண்டத்தை சேர்ந்த ஜெபர்சன்(21) என்பவர் ஓட்டிவந்த பைக் எதிர்பாராதவிதமாக இவர்கள் பைக் மீது மோதியது.இதில் தூக்கி வீசப்பட்ட 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு, மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து ஜஸ்டஸ் பிரபின் மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை ஜஸ்டஸ் பிரபின் பரிதாபமாக இறந்தார்.அல்லி ஜெயராணி சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார். ெஜபர்சன் மார்த்தாண்டம் தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்த புகாரின்பேரில் தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.