×

நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் தொழிலாளி படுகாயம்

வில்லியனூர், பிப். 28:  வில்லியனூர் அடுத்த பாகூர் அருகே உள்ள குருவிநத்தம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (52), கொத்தனார். இவர் நேற்று காலை வில்லியனூர் அருகே உள்ள கோர்காடுபேட் பகுதியில் புதிதாக முதியோர் இல்லம் கட்டும் பணிக்கு சென்றுள்ளார். காலை 10 மணியளவில் சாரம் அமைப்பதற்காக கழிகளை நட்டுள்ளார். அப்போது ஒரு கழியானது அருகில் இருந்த சுடுகாட்டின் பக்கம் கீழே விழுந்துள்ளது. இதனை எடுப்பதற்காக வெங்கடேசன் சுடுகாட்டு பகுதிக்கு சென்றார். அந்த கழியானது ஒரு பை மூட்டையின் மீது கிடந்துள்ளதை பார்த்த வெங்கடேசன் அங்கிருந்த கழியை எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பையில் இருந்த நாட்டு வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் அப்பகுதி புகைமூட்டமாக காட்சியளித்தது. பிறகு சத்தம் கேட்டு அங்கு வேலை செய்தவர்கள் சுடுகாட்டு பகுதிக்கு ஓடி வந்து பார்த்தனர்.

அப்போது வெங்கடேசன் காலில் பலத்த காயம் அடைந்து அங்கேயே மயங்கி கிடந்துள்ளார். உடனே அவரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். இதுகுறித்து மங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பழனிவேல் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சரண்யா, தயாளன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்திய பஞ்சு, நூல், கத்தி போன்றவற்றை கைப்பற்றினர். தொடர்ந்து வெடிகுண்டு பரிசோதனை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தினர்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...