×

விருத்தாசலம் அருகே காதல் ஜோடிக்கு திருமணம்

விருத்தாசலம். பிப். 28: விருத்தாசலம் அடுத்த ஆவினங்குடி அருகே உள்ள கொடிக்களம் கிராமத்தை சேர்ந்தவர் தனசேகர் மகள் கார்த்திகா(21). இவர் தனது தாய் வழி பாட்டியின் கிராமமான கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள கிளிமங்கலத்தில் கடந்த 7 ஆண்டுகளாக  தங்கிக்கொண்டு படித்து வந்தார். இந்நிலையில், பிஎஸ்சி முடித்துவிட்டு தற்போது பாட்டி வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்த நேரு மகன் மணிகண்டன்(21) என்பவருடன் காதல் ஏற்பட்டு, இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
கடந்த 4 வருடமாக காதலித்து வந்துள்ள இவர்கள் நெருங்கி பழகி வந்ததை கண்டு இருவரது வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனால் கார்த்திகா மணிகண்டனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். அவரும் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இதையடுத்து மணிகண்டனின் பெற்றோர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மணிகண்டனை வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

இது குறித்து அறிந்த கார்த்திகா, மணிகண்டனிடம் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறி வந்துள்ளார். அதற்கு நான் வெளிநாட்டிற்கு சென்று விட்டு திரும்பி வந்து உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என கூறி மணிகண்டன் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காமல் வெளிநாடு செல்வதற்கான ஏற்பாடுகளில் மிக மும்முரமாக ஈடுபட்டு வந்துள்ளார். இதையடுத்து தன்னை ஏமாற்றிவிட்டு மணிகண்டன் வெளிநாடு செல்லும் நோக்கத்தை அறிந்த கார்த்திகா விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கிருபாலட்சுமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில், கார்த்திகா, மணிகண்டன் இருவரும் நெருங்கி பழகி காதலித்து வந்தது உறுதிசெய்யப்பட்டது. இதை தொடர்ந்து  அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் முன்னிலையில் காவல் நிலையம் அருகில் எம்ஜிஆர் நகரில் உள்ள வண்ண முத்துமாரியம்மன் கோயிலில் திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அதன்படி மகளிர் காவல் நிலைய போலீசார், கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் இரு வீட்டாரின் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. கார்த்திகாவின் கழுத்தில் மணிகண்டன் தாலியை கட்டி மனைவியாக ஏற்றுக்கொண்டார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.  

Tags : Vrindavasalam ,
× RELATED விருத்தாசலம் நகரம், பேருந்து...