குடியாத்தம் பிப். 28: குடியாத்தம் நகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள மாடி தோட்டத்தை கலெக்டர் சண்முகசுந்தரம் ஆய்வு செய்தார்.குடியாத்தம் நகராட்சி அலுவலக கட்டிடத்தின் மொட்டை மாடியில் 640 சதுர அடியில் நகராட்சி சார்பில் மாடி தோட்டம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் தக்காளி, பிர்க்கங்காய், கத்தரிக்காய், சோம்பு கீரை, கொத்தமல்லி, வெந்தயக்கீரை, சிறுகீரை உள்ளிட்ட பல்வேறு காய்கறி செடிகள் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இங்கு பராமரிக்கப்பட்டு வரும் காய்கறிகள் அறுவடையாக சில வாரங்களே உள்ள நிலையில் இங்கு விளைந்துள்ள காய்கறிகளை குடியாத்தம் அம்மா உணவகத்திற்கு வழங்க குடியாத்தம் நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இதனை கலெக்டர் சண்முகசுந்தரம் நேற்றுமுன்தினம் நேரில் சென்று பார்வையிட்டார்.அப்போது, மாடித்தோட்டம் வளர்ப்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் எச். பிரமேஷ், பொறியாளர் உமா மகேஸ்வரி மற்றும் நகராட்சி அதிகாரிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.