×

நுகர்வோர் அமைப்பு வலியுறுத்தல் முத்துப்பேட்டை அடுத்த கோவிலூரில் சமூக விரோதிகளின் புகலிடமான பயனற்ற கல்வி அலுவலகம்

முத்துப்பேட்டை, பிப்.27: முத்துப்பேட்டை அடுத்த கோவிலூரில் சமூக விரோதிகளின் புகலிடமான பயனற்ற கல்வி அலுவலகத்தில் இரவு நேரத்தில் சலங்கை ஓசை கேட்பதால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கோவிலூர் பைபாஸ் சாலைக்கு முன்பு சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை அரசு மீட்டு உதவி தொடக்கல்வி அலுவலர் அலுவலகம் புதியதாக கட்டி திறக்கப்பட்டது. போதுமான அலுவலர்களுடன் இயங்கி வந்த இந்த அலுவலகம் அனைத்து பணியாளர்களுக்கும் எந்தவிதமான சிரமங்களும், தொந்தரவுகளும் இல்லாமல் பயனில் இருந்தது.இந்தநிலையில் கடந்த 2009ம் ஆண்டு முத்துப்பேட்டை பகுதியில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் வௌ்ளத்தில் இந்த உதவி தொடக்கல்வி அலுவலர் அலுவலகம் மூழ்கியது. இதில் வௌ்ளநீர் புகுந்ததில் அலுவலகத்தில் உள்ள அனைத்து ஆவணங்களும் முற்றிலும் சேதமானது. இதனால் அடுத்து வந்த நாட்களில் தனியார் ஒருவர் தானமாக வழங்கிய முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் காவல் நிலையம் எதிரே உள்ள புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் உதவி தொடக்கல்வி அலுவலர் அலுவலகம் மாற்றப்பட்டு இன்று வரை இயங்கி வருகிறது. முன்பு இயங்கிய அந்த கட்டிடத்தை அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளாததால், தற்பொழுது அந்த கட்டிடம் பொலிவு இழந்து சேதமாகி விட்டது.

மேலும் அப்பகுதி முழுமைக்கும் கருவை காடுகளாக மாறிவிட்டது. இதனால் காடுகளில் ஊர்ந்து செல்லும் விஷ ஜந்துக்கள் தங்கும் ஒரு பகுதியாகவும், அப்பகுதி குடிமகன்களுக்கு பராகவும், சமூக விரோதிகளுக்கு புகலிடமாகவும் தற்பொழுது உள்ளது. மேலும் நள்ளிரவில் மரண ஓசைகளும், ஜில்..ஜில்.. சத்தங்களும் கேட்பதால் அந்த பயனற்று கிடக்கும் உதவி தொடக்கல்வி அலுவலர் அலுவலகம் திக்..திக்.. அலுவலகமாக மாறியுள்ளது. இதனால் அருகே குடியிருக்கும் மக்களுக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதன் அருகே அரசு பெண்கள் பள்ளியின் தங்கும் விடுதியும் உள்ளதால் மாணவிகள் இரவில் தூக்கமின்றி தவித்து வருகின்றனர். ஆகையால் இந்த பயனற்றநிலையில் கிடக்கும் உதவி தொடக்கல்வி அலுவலர் அலுவலகத்தை சீரமைத்து மீண்டும் இந்த கட்டிடத்தில் இயங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது இந்த கட்டிடத்தை இடித்து அகற்றி புதிய கட்டிடம் கட்டவேண்டும் என்று இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags : Consumer Organization ,
× RELATED அயோடின் உப்பு விழிப்புணர்வு முகாம்