மயிலாடுதுறை,பிப்.27: கடந்த 20ம்தேதி பாசனதாரர் சங்கம் நடத்திய ஊர்வலத்தில் கலந்து கொண்டோர் மீது 200 நபர்கள் மீது மட்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் பங்கேற்ற 1500 விவசாயிகள் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.காவேரி டெல்டா பாசனதாரர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு காவிரி டெல்டா பாசனதாரர்கள் முன்னேற்ற சங்க தலைவர் குரு கோபி கணேசன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் பனித்தலைமேடு அன்பழகன், பொருளாளர் மதியழகன், செயலாளர் முருகன், துணை தலைவர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கடந்த 20ம் தேதி 10 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி நடைபெற்ற ஊர்வலம், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 200 பேர்மீது மட்டும் மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கலந்து கொண்ட 1500 விவசாயிகள் மீதும் வழக்கு போடவேண்டும். கடந்த 3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.கூட்டுறவு வங்கி, தேசிய உடைமை ஆக்கப்பட்ட வங்கி மற்றும் தனியார் வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் விவசாயிகளுக்கு குருவை சம்பா தொகுப்பு திட்டங்களை மீண்டும் துவக்க வேண்டும் என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.