×

நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விதி மீறிய 37 கட்டிடங்களுக்கு சீல்

ஊட்டி, பிப். 26:  ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி கட்டப்பட்ட 37 கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணிகளை நகராட்சி அதிகாரிகள் துவக்கியுள்ளனர்.  நீலகிரி மாவட்டத்தில் மாஸ்டர் பிளான் சட்டம் அமுலில் உள்ள நிலையில், முறையாக அரசிடம் இருந்து அனுமதி பெற்றும், விதிமுறைகளுக்குட்பட்டே கட்டிடங்களை கட்ட முடியும். தற்போது வனத்துறை, புவியியல் துறை, வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புக்களிடம் இருந்து முறையான அனுமதி பெற வேண்டும். அதுமட்டுமின்றி, மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ள கமிட்டியிடம் முறையான அனுமதி பெற்ற பின்னரே கட்டிடங்களை கட்ட முடியும். ஆனால், நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டப்படுகிறது. குறிப்பாக, ஊட்டி மற்றும் புறநகர் பகுதிகளில் வானுயுர்ந்த கட்டிடங்கள் விதிமுறை மீறி கட்டப்பட்டு வருகிறது. சில அதிகாரிகள் இதனை கண்டு கொள்ளாமலும், கட்டிட உரிமையாளர்களுக்கு சாதகமாக செயல்படுவதால், அரசு மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை மீறி கட்டிடங்கள் உருவாகிக் கொண்டிருகின்றன.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் அவ்வப்போது சீல் வைப்பது, இடிப்பது போன்ற செயல்களில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபடுகின்றனர். ஆனால் கட்டிடம் கட்டும் பணி நின்றபாடு இல்லை. விதிமுறை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டுதான் வருகிறது.
 இந்நிலையில், ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விதிமுறை மீறிய 37 கட்டிடங்களுக்கு சீல் வைக்க நகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து நேற்று ஊட்டி நகரில், கமர்சியல் சாலை, விக்டோரியா ஹால், குன்னூர் ரோடு, லோயர் பஜார் உள்ளிட்ட 37 இடங்களில் உள்ள கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணிகளை மேற்கொண்டனர். கமர்சியல் சாலையில் போலீசார் பாதுகாப்புடன் விதிமுறை மீறி கட்டப்பட்ட ஒரு கட்டிடத்தை சீல் வைக்க நகராட்சி அதிகாரிகள் சென்றனர். பணிகளை துவக்கும் போது, அந்த கட்டிட உரிமையாளர் கட்டிடத்தை சீல் வைக்க அனுமதிக்கவில்லை.

மேலும், பேச்சுவார்த்தைக்கு பின், விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டிடத்தை 2 நாட்களுக்குள் காலி செய்து கொடுப்பதாக கூறினார். இதனைத்தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர்.  தொடர்ந்து, நகரில் பல இடங்களில் விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணிகளை நகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டனர். இது போன்று, விதிமுறை மீறிய கட்டிடங்களை சீல் வைக்க செல்லும்போது, ஆளுங்கட்சியினரின் தலையீடு அதிகமாக உள்ளதால், சில இடங்களில் விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சீல் வைக்க முடியாமல் நகராட்சி அதிகாரிகள் திரும்பும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது விதிமுறை மீறிய கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணிகளை துவக்கியுள்ளதால், கட்டிட உரிமையாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். இது குறித்து நகராட்சி நகரமைப்பு அலுவலர் இளங்ேகா கூறியதாவது:-ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் 37 இடங்களில் விதிமுறைகளை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடங்களுக்கு சீல் வைக்க நகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். இதன் பேரில், தற்போது சீல் வைக்கும் பணிகளை துவக்கியுள்ளோம், என்றார்.

Tags : Municipalities ,
× RELATED பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு பேரூராட்சியில் தண்ணீர் பந்தல் திறப்பு