×

வடுவூர் அருகே பைக் மீது லாரி மோதி வியாபாரி பலி

மன்னார்குடி, பிப்.26:வடுவூர் அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரி பைக் மீது மோதியதில் நெல் வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ரூக்குமணிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் திரிசங்கு (58). நெல்வியாபாரி. இவருக்கு பவானி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். பவானி வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் ஊருக்கு வந்துள்ளார்.இந்நிலையில் நெல் வியாபாரி திரிசங்கு நேற்று முன்தினம் இரவு வடுவூர் சென்று விட்டு பைக்கில் மன்னார்குடிக்கு திரும்பி வந்தார். அப்போது எடமேலையூர் மெயின் ரோடு ராணித் தோப்பு அருகே திருத்துறைப்பூண்டியில் இருந்து வைக்கோல் பாரம் ஏற்றிக் கொண்டு கரூர் நோக்கி சென்ற டாரஸ் லாரி பைக் மீது மோதியது. இதில் திரிசங்கு பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சாலையில் விழுந்து கிடந்தார்.

அப்போது அவ்வழியே வந்த சிலர் திரிசங்குவை மீட்டு மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் திரிசங்கு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் திரிசங்கு உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து குறித்து வடுவூர் இன்ஸ்பெக்டர் பசுபதி வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வைக்கோல் லாரியை ஒட்டி வந்த பட்டுக்கோட்டை ஆதி தெருவை சேர்ந்த டிரைவர் அழகு முருகன் (42) என்பவரை கைது செய்தனர்.

Tags : businessman ,
× RELATED அதிமுக நிர்வாகி மீது தொழிலதிபர் புகார்