தொண்டி, பிப். 26:தொண்டி பேரரூராட்சியில் செயல் அலுவலர் இல்லாததால் அனைத்து பணிகளிலும் தொய்வு நிலை ஏற்ப்பட்டுள்ளது. குடிநீர் வழங்குவது, சாலை வசதிகளை சரி செய்வது என அனைத்தும் பின் தங்கிய நிலையில் உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக செயல் அலுவலர் நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தொண்டி பேரூராட்சியில் கடந்த சில மாதங்களாக நிரந்தர செயல் அலுவலர் இல்லை. அதனால் குடி தண்ணீர் வழங்குவது உள்ளிட்ட பொதுமக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தும் சரியாக நடைபெறவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடர்ந்து 10 நாட்களுக்கு மேலாக குடி தண்ணீர் சரியாக வழங்ப்படவில்லை.
இதுகுறிதது முறையிடவும் அதிகாரிகள் இல்லை. அதனால் தொண்டி பேரூராட்சிக்கு உடனடியாக செயல் அலுவலர் நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தொண்டியைச் சேர்ந்த ஜிப்ரி கூறுகையில், ‘தொண்டி பேரூராட்சியில் பல்வேறு கிராம பகுதிகளும் அடங்கியுள்ளது. பேரூராட்சியில் செயல் அலுவலர் இல்லாமல் பல்வேறு பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. உடனடியாக செயல் அலுவலரை நியமிக்க வேண்டும்’ என்றார்.