ராமேஸ்வரம், பிப். 26:உலகில் அமைதி நிலவ வேண்டி நாட்டிலுள்ள ஜோதிர்லிங்க ஸ்தலங்களுக்கு பாதயாத்திரை மேற்கொண்டு வரும மத்திய பிரதேச மாநில சாதுக்கள் நேற்று ராமேஸ்வரத்தில் சுவாமி தரிசனம் செய்தனர். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் அமைந்துள்ள கோத்திரி சர்க்கார் ஆசிரமத்தைச் சேர்ந்து சாதுக்குள் 12 பேர் சுவாமி பிரக்யானந்த் தலைமையில் உலகில் அமைதி நிலவ வேண்டி நாட்டிலுள்ள ஜோதிர்லிங்க ஸ்தலங்களுக்கு பாதயாத்திரையாக சென்று சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர். இவர்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி உத்தரகாண்ட் மாநிலம் கங்கோத்ரியில் இருந்து புனித கங்கை நீருடன் 12 ஜோதிர்லிங்க தலங்களுக்கு பாதியாத்திரையை துவங்கினர். கங்கோத்ரி, கேதார்நாத், காசி விஸ்வநாதர், ஜார்க்கண்ட் சென்று சுவாமி தரிசனம் செய்து ஐந்தாவதாக நேற்று காலை ராமேஸ்வரம் வந்தனர். ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் புனித நீராடிய இவர்கள் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமிக்கு கங்கை நீரால் அபிஷேகம் செய்து உலகில் அமைதி நிலவ வேண்டி சிறப்பு பூஜைகள் செய்தனர்.தொடர்ந்து ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டவர்கள் ஆந்திரா வழியாக மற்ற ஜோதிர்லிங்க ஸ்தலங்களுக்கும் சென்று சிறப்பு வழிபாடு செய்கின்றனர். நாட்டிலுள்ள பன்னிரெண்டு ஜோதிர்லிங்க ஸ்தலங்களிலும் வழிபாடு நடத்துவதற்கு சுமார் 10 ஆயிரம் கி.மீ தூரம் பாதயாத்திரை செல்லும் இவர்கள் நாள் ஒன்றுக்கு 35 கி.மீ. தூரம் பாதயாத்திரையாக செல்வதாகவும் சுவாமி பிரக்யானந்த் தெரிவித்தார்.