×

புவியின் சூழல் பாதுகாப்பில் பெரும் பங்கு வகிக்கும் கோயில் வனங்களை காப்பாற்ற வேண்டும்

புதுக்கோட்டை, பிப். 25: புவியின் சூழல் பாதுகாப்பில் சப்தமில்லாமல் பெரும் பங்கைத் தந்து கொண்டிருக்கும் “கோயில் வனங்களை காப்பாற்ற அரசு சரியான நடவடிகையை மேற்கொள்ள வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில் உள்ள இந்துக்கள் குலதெய்வ வழிபாடு மிக முக்கிய வழிபாடாக இருந்து வருகிறது. தமிழகத்தில் முனியப்பன், அய்யனார், தென்சுடலைமாடன், கருப்ப சாமிகள் என எல்லை தெய்வங்கள், கிராமக்காவல் தெய்வங்கள் காளி, பிடாரி என ஏராளம் இருந்தாலும், இயற்கையின் அமைப்பில் அவையனைத்தும் ஒரே மாதிரியான கோயில் வனங்களாக அமைந்திருப்பதைப் பார்க்க முடியும். பொதுவாக ஒரு பெரிய ஆலமரம் அல்லது அரச மரம், அதனுடன் பல கூந்த பனை மரங்கள், சில ஈச்சமரங்கள், அந்த மண்ணுக்கேற்றவாறு பிரத்யேக மரங்கள், செடிகள், கொடிகள், புல், பூண்டுகள், புதர்களுடன் அரிய மூலிகைகளைக் கொண்ட ஒரு தோப்பாக அந்தக் காடுகள் இருக்கும். பாம்பு, கீரி, அட்டை, உடும்பு, ஓணான், பச்சோந்தி உள்ளிட்ட பல நூறு உயிரினங்கள் வாழும் இடமாக அது இருக்கும். மத்தியில் சில இடங்களில் உயரமான சிலைகளும், பல இடங்களில் வெறுமனே நட்டு வைக்கப்பட்ட வேல் கம்புகளும் தான் “கோயில் காடு’களின் பிரதானம். அரை ஏக்கர் முதல் 2 ஏக்கர் வரையிலான குறுங்காடுகளாக அவை காணப்படுகின்றன.

இதுகுறித்து மூத்த கிராம வாசி கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள வனக்காடுகளில் இந்த மண்ணுக்கே உரிய அரிதான பாலை மரங்கள், உசிலை, காஞ்சிரான், நெய்கோட்டான் மரங்களும், சங்கு இலை, நொச்சி இலை, ஆடு தின்னா பாலை, பெருமருந்து போன்ற அரிய மூலிகைகளும் காணப்படுகின்றன. பெரும்பாலானவை வருவாய்த் துறையினரின் கட்டுப்பாட்டில் “கோயில் காடுகள்’ என்ற பெயரிலேயே உள்ளன. சில இடங்களில் பசு மேயும் கொட்டல், மேய்ச்சல் நிலம் போன்ற வகைப்பாட்டிலும் உள்ளன. ஊருக்கேற்றாற்போல கொம்படி ஆலயம், காட்டுக்கோயில் போன்ற பெயர்களும் பிரத்யேகமாக உள்ளன. பல நூறு ஆண்டுகள் பழைமை மாறாமல் இருந்த இக்காடுகளுக்கு கடந்த சில ஆண்டுகளில் ஆபத்து நேரத் தொடங்கியிருக்கிறது. மண்ணால் ஆன பெருஞ்சிலைகளைச் செய்து வழிபட்டு வந்த நம் மக்கள் இப்போது அழியாத சிலைகளை அமைக்கிறோம் என்ற பெயரில் கோயில் காடுகளின் உயிர்த்தன்மையை அழிக்கிறார்கள். மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டியதுதான் பிரதானம் என்றாலும் அரசு இதற்கான சில வழிமுறைகளைக் கண்டறிந்து முறைப்படுத்தி அந்த கிராம மக்களிடமே ஒப்படைக்க வேண்டும் கிராமங்களில் புனிதமான இடமாகக் கருதப்படும் இக்காடுகளுக்கு இப்போது பல்வேறு வடிவங்களில் ஆபத்து வந்திருக்கிறது. எனவே, மாநிலம் முழுவதும் உள்ள கோயில் காடுகளை முதலில் கணக்கெடுக்க வேண்டும். அந்தந்தப் பகுதியிலுள்ள மரங்கள், செடி, கொடி தாவரங்களுடன் சின்னச் சின்ன உயிரினங்களையும் கணக்கெடுக்க வேண்டும். அவற்றை முழுமையாக ஆவணப்படுத்த வேண்டும் என்றார்.

Tags : Temple forests ,Earth ,
× RELATED இந்தியர்களின் உடல்நலத்தை கெடுத்து...