×

கோயில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சலவைத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தேனி, பிப். 25: கம்பத்தில் சலவைத் தொழிலாளர்களுக்கு சொந்தமான கோயில் இடத்தை ஆக்கிரமித்து கோயில் கட்டுவதாக, அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி, தேனி மாவட்ட கலெக்டரிடம் நேற்று மனு அளித்தனர்.
கம்பத்தில் உள்ள ஓடைக்கரைத் தெருவைச் சேர்ந்த பென்னிகுக் சலவைத் தொழிலாளர் சங்க தலைவர் சிவக்குமார் தலைமையில், 50க்கும் மேற்பட்ட சலவைத் தொழிலாளர்கள், தேனியில் கலெக்டர் அலுவலகம் முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:கம்பம் நகரில் உள்ள சுருளிபடடி சாலையில் தொட்டமன்துறை அருகே சலவைத் தொழிலாளர்களுக்கு பாத்தியப்பட்ட கருப்பசாமி, பெத்தனசாமி, நாகம்மாள், காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில்களில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரித்து திருவிழாக்களை நடத்தி வருகிறோம்.

இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், கோயிலின் பின்புறமுள்ள இடத்தை செந்தில், அய்யப்பன் ஆகியோர் ஆக்கிரமித்து மாசாணியம்மன் கோயில் கட்டி வருகின்றனர். மேலும், சலவைத் தொழிலாளர்களின் கோயில் பீடத்தையும் இடித்து விட்டனர். இது குறித்து உத்தமபாளையம் தாசில்தாரிடம் புகார் தெரிவித்தோம். அவர் கோயில் இடத்தை ஆக்கிரமித்துள்ள தனியாருக்கு சொந்தம் என தெரிவித்துள்ளார். எனவே, கலெக்டர் தலையிட்டு, கோயிலை மீண்டும் சர்வே செய்து, சலவைத் தொழிலாளர்களிடம் கோயில் இடத்தை ஒப்படைக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளனர்.

Tags : Laundry Workers ,Abolition ,
× RELATED சலவை தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம்