ஊத்துக்கோட்டை, பிப். 25: காஞ்சிபுரத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் குறித்து ஊத்துக்கோட்டை பஸ் பணிமனை முன்பு தொமுச நிர்வாகிகள் வாயிற்கூட்டம் நடத்தினர்.காஞ்சிபுரத்தில் வருகின்ற மார்ச் 10ம் தேதி 14வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை குறித்து, தொமுச, சிஐடியு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இது குறித்து ஊத்துக்கோட்டை போக்குவரத்து பணிமனை முன்பு நேற்று மாலை போக்குவரத்து தொழிலாளர்கள் வாயிற்கூட்டம் நடைபெற்றது.
இதில், தொமுச பிரச்சார செயலாளர் பாலாஜி தலைமை தாங்கினார். பணிமனைச்செயலாளர் பழனி, நடத்துனர் செயலாளர் முனிநாதன், துணைச்செயலாளர் வேதன், நிர்வாகிகள் லட்சுமி நாராயணன், முரளி, கவுரி சங்கர், சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட காஞ்சி மண்டல பொதுச்செயலாளர் ரவி, தலைவர் சுதாகரன் மற்றும் மண்டல நிர்வாகிகள் செல்வம், ஆபத்சகாயம், நந்தகோபால் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இறுதியில், சிஐடியு பணிமனை செயலாளர் பாஸ்கர் நன்றி கூறினார்.