×

குடிமகன்கள் புகலிடமாக மாறிய அனகாபுத்தூர் பேருந்து நிலையம்: பயணிகள் அவதி

பல்லாவரம்: அனகாபுத்தூர் பேருந்து நிலையம் குடிமகன்களின் புகலிடமாக மாறியுள்ளதால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.பல்லாவரம் அடுத்துள்ள அனகாபுத்தூர் பகுதியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள பஸ் நிலையத்தில் இருந்து பிராட்வே, தி.நகர், ஆலந்தூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு மாநகர பஸ்கள்  இயக்கப்பட்டு வருகின்றன. இப்பகுதி மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் வேலைக்கு செல்வோர் தினசரி இந்த பஸ் நிலையம் வந்து பேருந்து பிடித்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.இந்நிலையில், சமீப காலமாக இந்த பஸ் நிலையம் குடிமகன்கள் கூடாரமாக மாறி வருகிறது. டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வரும் குடிமகன்கள் இந்த பஸ் நிலையத்தில் வைத்து அருந்துகின்றனர். மேலும், போதை  தலைக்கேறியதும் அங்குள்ள நடைபாதை மற்றும் இருக்கையில் படுத்து ஓய்வெடுக்கின்றனர்.

இதனால், இங்கு வரும் பயணிகள் இருக்கையை பயன்படுத்த முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர். அதுமட்டுமின்றி, குடிமகன்கள் அங்கேயே வாந்தி எடுப்பது, சிறுநீர் கழிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் துர்நாற்றம் வீசி வருகிறது.  இதனை தடுக்க வேண்டிய அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர், என பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.  எனவே, போதை ஆசாமிகளின் பிடியில் உள்ள அனகாபுத்தூர் பேருந்து நிலையத்தை மீட்டு, அதனை சுத்தப்படுத்தி, முறையாக  பராமரிக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Anakaputhur Bus Stand ,citizens ,
× RELATED மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் 26,875 பேர் தபால் வாக்களிக்க ஏற்பாடு