×

கண்ணன்கோட்டை நீர்த்தேக்கத்தில் பரபரப்பு 37.5 கோடி இழப்பீடு கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி, பிப். 21: கும்மிடிப்பூண்டி அடுத்த கண்ணன்கோட்டை  ஏரி மற்றும் தேர்வாய் ஏரியை இணைத்து நீர்தேக்கம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து கிருஷ்ணா கால்வாய் மூலம் சென்னைக்கு 1 டிஎம்சி தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் தமிழக அரசின் சார்பில் திட்டம் தீட்டப்பட்டு, அதற்கான பணி கடந்த 2011ம் ஆண்டு துவங்கியது. இந்த திட்டத்திற்காக 800 ஏக்கர் பட்டா நிலம், 200 ஏக்கர் மேய்க்கால் புறம்போக்கு நிலம் அரசால் கையகப்படுத்தப்பட்டது. இந்நிலையில்  நிலத்தை இழக்கும் விவசாயிகளுக்கு அரசு சார்பில் 1 மடங்கு இழப்பீடு அறிவித்தது. இதனை ஏற்காத விவசாயிகள் நீதிமன்றத்தை அணுகிய நிலையில் உச்சநீதி மன்றம் சந்தை மதிப்பில் 4 மடங்கு இழப்பீட்டு தொகையை அளிக்குமாறு அறிவித்தது. ஆனால் தமிழக அரசு மதிப்பீட்டில் 2.4 மடங்கு இழப்பீட்டை மட்டுமே வழங்கியது. இந்நிலையில் மீதம் உள்ள 1.6 மடங்கு இழப்பீட்டு தொகை மற்றும் அரசு வழங்க வேண்டிய நிலுவை தொகைக்கு 2013ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை 589 விவசாயிகளுக்கு தர வேண்டிய வட்டி தொகையான 37.5 கோடி நிதியை வழங்க கோரி விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்திடம்  கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனாலும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் நேற்று கண்ணன்கோட்டை நீர்த்தேக்கத்தில் விவசாயிகள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கண்ணன்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தசாமி தலைவர் தாங்கினார். முன்னாள் தலைவர் ராதன் முன்னிலை வகித்தார். அப்போது தமிழக அரசை கண்டித்தும், விவசாயிகளை அலைக்கழிக்கும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் அனைவரும் கோஷம் எழுப்பியதால் அங்கு பெரும் பரபரப்பான சூழல் நிலவியது. தகவலறிந்து கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் செந்தாமரைச்செல்வி, கண்ணன்கோட்டை நீர்தேக்க திட்ட செயற்பொறியாளர் தில்லைக்கரசி, உதவி பொறியாளர் தனசேகர், பாதிரிவேடு உதவி ஆய்வாளர் இளங்கோ சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகள், ‘‘இதுவரை இந்த பிரச்னை குறித்து 2013ம் ஆண்டு முதல் இதுநாள் வரை ஆட்சியராக இருந்த 5 பேரிடம் கோரிக்கை வைத்தும் எவ்வித பயனுமில்லை’’ என்று கூறி வாக்குவாதம் செய்தனர். அதற்கு அதிகாரிகள், ‘‘உங்களுக்கு தர வேண்டிய வட்டித்தொகையான 37.5 கோடி நிதி வங்கியில் பத்திரமாக உள்ளது. அதை, மார்ச் மாதம் இறுதிக்குள் முழுவதுமாக வழங்குவோம்’’ என உறுதி அளித்தனர். இதனை விவசாயிகள் ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Tags : reservoir ,Kannankottai ,
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு...