×

மகாசிவராத்திரி எதிரொலி மல்லிகை கிலோ ரூ.800 பிச்சி ரூ.900க்கு விற்பனை

மதுரை, பிப். 21:  மகாசிவராத்திரியை முன்னிட்டு, மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ கிலோ ரூ.800க்கு விற்பனையானது. பூஜை உள்ளிட்வைகளுக்கென பூக்கள் வாங்க பொதுமக்கள் திரண்டனர். மதுரை மாவட்டத்தில், மாசி மகாசிவராத்திரியை முன்னிட்டு, அனைத்து குலதெய்வ கோயில்கள் மற்றும் சிவலாயங்களில் இன்றிரவு முழுவதும் நான்கு கால பூஜைகள், சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு, இரவு முழுவதும் கண் விழித்து தங்களது குலதெய்வ கோயிலில் விடிய, விடிய நடைபெறும் அனைத்து கால பூஜைகளிலும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள்.  இந்த மகா சிவராத்திரியை முன்னிட்டு கோயில்களில், சுவாமிக்கு பூ அலங்காரம் செய்யப்படும். பொதுமக்கள் தங்களது நேற்றிக்கடனாக பூ மாலை வாங்கி அணிவிப்பர். இதனால், நேற்று மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. விழாவிற்கேற்ப பூக்களின் வரத்தும் இருந்தது. ஆனால், பூக்கள் விலை கடுமையாக உயர்ந்து இருந்தது.

மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் நேற்றைய விலை (கிலோவிற்கு) விபரம் வருமாறு: மல்லிகை ரூ.800, பிச்சிப்பூ ரூ.900, வாடாமல்லி (கொழுந்து) ரூ.120, வெள்ளை செவந்தி ரூ.220, மஞ்சள் செவ்வந்தி ரூ.90, கனகாம்பரம் ரூ.400, முல்லை ரூ.500, மரிக்கொழுந்து கட்டு ரூ.15, வில்வஇலை ரூ.50, மெட்ராஸ் மல்லி ரூ.400, மனோரஞ்சிதம் ஒரு பூ ரூ.10, அரளி ரூ.60, துளசி ரூ.100 என விற்பனை செய்யப்பட்டது. வியாபாரிகளும், பொதுமக்களும் தங்களுக்கு தேவையான பூக்களை ஆர்வத்தோடு வாங்கிச் சென்றனர். மல்லி வரத்து அதிகரித்திருந்தது. எனவே, தேவை அதிகம் இருப்பினும் விலை பெரிய அளவில் உயர்வில்லை கடந்த வாரம் ரூ.1500 வரை விற்ற நிலையில், தற்போது சற்று விலை குறைவாகவே, ரூ.800க்கு விற்பனையானது. ஆனால், ரூ.300க்குள் விற்று வந்த பிச்சிப்பூ விலை ரூ.900 வரை உயர்ந்து விற்பனையானது.

Tags : Mahasivarathri ,echo jasmine ,
× RELATED இன்று மகாசிவராத்திரி குலதெய்வ கோயில்களில் குவியும் பக்தர்கள்