×

சேலம் கொண்டலாம்பட்டியில் கல்லூரி பேராசிரியைக்கு மாஜி கணவர் கொலை மிரட்டல்

சேலம், பிப்.21:சேலம் கொண்டலாம்பட்டியில் தனியார் கல்லூரி பேராசிரியைக்கு கொலை மிரட்டல் விடுத்த மாஜி கணவரை போலீசார் தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்தவர் சரத்வேலன். இவரது மனைவி திலகவதி (38). இவர், கொண்டலாம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் கல்லூரியில் இருந்தபோது, திலகவதியால் விவாகரத்து செய்யப்பட்ட முதல் கணவரான நாமக்கல் மாவட்டம் ராமாபுரம்புதூரை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் வந்து, திலகவதியிடம் பேசியுள்ளார். அப்போது அவர், தன் மீது நல்லிப்பாளையம் போலீசில் உள்ள கொலை வழக்கு தொடர்பாக கோர்ட்டில் சாட்சி சொல்ல கூடாது, அவ்வாறு கூறினால் கொன்று விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி திலகவதி, கொண்டலாம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் புஷ்பராணி விசாரணை நடத்தி, பேராசிரியை திலகவதியை மிரட்டிய ராஜ்குமார் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்தார். தொடர்ந்து, ராஜ்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Majee ,Salem ,
× RELATED போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் பதுக்கி விற்பனை