விழுப்புரம், பிப். 21: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில்11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வினை 80,966 பேர் எழுதுகிறார்கள். தேர்வு மையங்கள், வினாத்தாட்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போட வேண்டுமென ஆட்சியர் அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் மார்ச், ஏப்ரலில் நடைபெறவுள்ள மேல்நிலைத்தேர்வு மற்றும் இடைநிலை பொதுத்தேர்வுகள் குறித்து, மாவட்ட அளவிலான ஆய்வு அலுவலர்களின் ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் ஆட்சியர் அலுலகத்தில் நடந்தது. இக்கூட்டத்துக்கு தலைமை தாங்கிய ஆட்சியர் அண்ணாதுரை பேசுகையில், வரும் மார்ச் 2ம் தேதி தொடங்கவுள்ள 12ம் வகுப்பு பொதுத்தேர்வை 155 மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 8,213 மாணவர்களும், 9,293 மாணவிகள் என மொத்தம் 17,506 மாணவ, மாணவிகள் 75 தேர்வு மையங்களில் எழுதுகிறார்கள்.
மேலும், 4ம் தேதி தொடங்க உள்ள 11ம் வகுப்பு பொதுத்தேர்வினை 156 பள்ளிகளைச் சேர்ந்த 8,532 மாணவர்கள், 9,460 மாணவிகள் என மொத்தம் 17,992 பேர், 75 தேர்வு மையங்களில் எழுதுகிறார்கள். மார்ச் 27ம் தேதி முதல் நடைபெற உள்ள 10ம் வகுப்பு பொதுத்தேர்வினை 312 உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 10,472 மாணவர்களும், 10,326 மாணவிகள் என மொத்தம் 20,798 பேர், 97 மையங்களில் எழுதுகிறார்கள். மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 5 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களுக்கும், 4 விடைத்தாள் சேகரிப்பு மையங்களுக்கும், 75 மேல்நிலைதேர்வு மையங்களுக்கும், 97 இடைநிலை தேர்வு மையங்களுக்கும், வினாத்தாள் எடுத்துச்செல்லும் 18 வழித்தடங்களுக்கும் ஆயுதம் தாங்கிய போலீசார் மூலம் பாதுகாப்பு அளித்திட வேண்டும். முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் தேர்வு மையங்களுக்கு உரிய நேரத்தில் வினாத்தாட்கள் செல்வதை உறுதி செய்தல் மற்றும் தேர்வு மையங்களில் எந்தவித புகார்களுக்கும் இடமின்றி தேர்வர்கள் தேர்வெழுத உரிய பணியாளர்களை நியமனம் செய்து அனைத்து தேர்வு பணிகளையும் தேர்வுத்துறையின் வழிகாட்டுதலின்படி மேற்கொள்ளவேண்டும். அனைத்துதேர்வு மையங்களுக்கும் தடையின்றி மின்சாரவசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். போக்குவரத்து துறையினரால் உரிய போக்குவரத்து வசதிகளையும், சுகாதாரத்துறையினர் தற்காலிக மருத்துவ முகாம்களையும் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில், கூடுதல்மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாபிசிங், திண்டிவனம் சப்-கலெக்டர் அனு, விழுப்புரம் முதன்மைக்கல்வி அலுவலர் முனுசாமி, கூடுதல்எஸ்பி சரவணக்குமார் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மார்ச் 2ம்தேதி தொடங்கவுள்ள பிளஸ்2 பொதுத்தேர்வுக்காக கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்தில் 34 தேர்வு மையங்களும், திருக்கோவிலூர் கல்வி மாவட்டத்தில் 23 தேர்வு மையங்களும், உளுந்தூர்பேட்டை கல்வி மாவட்டத்தில் 20 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் மொத்தமுள்ள 77 தேர்வு மையங்களில் 21664 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். மார்ச் 4ம்தேதி தொடங்கும் பிளஸ்1 தேர்வுக்காக கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்தில் 34 தேர்வு மையங்களும், திருக்கோவிலூர் கல்வி மாவட்டத்தில் 23 தேர்வு மையங்களும், உளுந்தூர்பேட்டை கல்வி மாவட்டத்தில் 20 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் மொத்தமுள்ள 77 தேர்வு மையங்களில் 23,084 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.
மார்ச் 27ம்தேதி தொடங்கவுள்ள 10ம் வகுப்பு தேர்வுக்காக கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்தில் 45 தேர்வு மையங்களும், திருக்கோவிலூர் கல்வி மாவட்டத்தில் 30 தேர்வு மையங்களும், உளுந்தூர்பேட்டை கல்வி மாவட்டத்தில் 22 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வை கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் மொத்தமுள்ள 97 தேர்வு மையங்களில் 26,068 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக பொதுத்தேர்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் ஆட்சியர் கிரண்குராலா தலைமையில் நடந்த ஆயத்தக் கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குமரன் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.