×

தலைமை ஆசிரியர்களுக்கு செய்முறை தேர்வு ஆலோசனை

பரமக்குடி, பிப்.20:  பரமக்குடி கல்வி மாவட்ட அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான செய்முறை தேர்வு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பரமக்குடி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான செய்முறை தேர்வு குறித்த கூட்டம் கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலர் கருணாநிதி தலைமை தாங்கினார். பள்ளி துணை ஆய்வாளர் ஆனந்த் முன்னிலை வகித்தார். கீழமுஸ்லிம் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் எம்.அஜ்மல்கான் வரவேற்றார். இக்கூட்டத்தில் பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்திற்கான செய்முறைத் தேர்வு ஆணைகளை பரமக்குடி மாவட்டக் கல்வி அலுவலர் வழங்கினார்.

இதுபற்றி பரமக்குடி மாவட்டக் கல்வி அலுவலர் கருணாநிதி கூறியதாவது, ‘‘பரமக்குடி கல்வி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்திற்கான செய்முறைத் தேர்வுகள் அனைத்துப் பள்ளிகளிலும் பிப்.21 முதல் பிப்ரவரி 28 வரை நடத்த உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. இச்செய்முறைத் தேர்வுகளை நடத்த வேறொரு பள்ளியிலிருந்து புறத் தேர்வாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான அறிவியல் செய்முறைத் தேர்வுகள் பிப்.26 முதல் பிப்ரவரி 28 வரை மாணவர்களுக்கு பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியிலும், மாணவிகளுக்குப் பரமக்குடி சௌராஷ்டிரா மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற இருக்கின்றன. தனித்தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களுக்கு சென்று உரிய தேதியில் செய்முறைத் தேர்வுகளை செய்து முடிக்கக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Tags : head teachers ,
× RELATED ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ரூ.10 லட்சம்...